ஒரத்தநாடு அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் செய்ய முயன்றனர். வருவாய்த் துறையினரின் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரத்தில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் மழைக் காலங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், இப்பகுதியில் யாரேனும் இறப்பு நேரிட்டால் எடுத்துச் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலை வசதியும் அருகில் இருக்கும் கல்லணை கால்வாய் கிளை ஆற்றையும் தூர்வாரி தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை கல்லணை கால்வாய் ஆற்றில் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால் சாலை சம்பந்தமாக எந்த பணியும் தொடங்கவில்லை.
இதை அறிந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, பட்டுக்கோட்டை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த தகவல் அறிந்த திருவோணம் போலீசார் மற்றும் திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பு சுவர், சாலை பணிக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.