தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருமலைக்கோட்டையை சேர்ந்த கிராம மக்கள் வந்திருந்தனர். அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: - எங்கள் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற பல முறை கோரிக்கைகள் வைத்தோம்.
ஆனால் தற்போது வரை அகற்றப்படவில்லை. கிராமப் பண்பாட்டை சீரழிக்கும் டாஸ்மாக் கடை அருகே பல கொடுமை நிறைந்த சம்பவங்கள் தினமும் நடந்து வருகின்றன. இதனால் டாஸ்மாக் கடை வழியாக பயணிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களின் கண்ணீர் கையெழுத்துகளை மனுவுடன் இணைத்துள்ளோம். இதனை புரிந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.