தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த நெல் பயிர்கள் கதிர்விடும் தருவாயில் உள்ளது. இன்னும் சில தினங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் நெற்பயிர்களை அறுவடை செய்து விடலாம் என விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்கு கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையில் நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளது. விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகத் தொடங்கி இருப்பதால் பெருமளவில் பொருளாதார நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.