தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத, ஆதரவற்றோரின் 20 சடலங்கள் வியாழக்கிழமை (மே 8) அல்லது வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளன. தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி ஆகிய காவல் நிலையங்கள், திருவையாறு, மதுரை, கடலூர் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் விபத்தில் காயம் அடைந்தவர்கள், மயங்கி விழுந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
இதுபோல், அடையாளம் தெரியாத, ஆதரவற்றோர் என 20 சடலங்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் சில மாதங்களாக உள்ளன. இவர்களது உடல்களைப் பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை. இந்த உடல்களுக்கு யாரும் உரிமை கோராவிட்டால் ஒரு வாரத்தில் அடக்கம் செய்யப்படும் என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் உரிமை கோரவில்லை.
இதனால் இந்த உடல்களைக் காவல் துறையினரே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், பிணவறையில் எத்தனை உடல்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றன என மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி, 20 சடலங்களையும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.