கும்பகோணம் அருகே உள்ள எலுமிச்சங்காபாளையத்தில் குடிநீர் வேண்டி மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்ட னர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி யைச்சேர்ந்தது தாராசுரத்திற்குட்பட்ட எலுமிச்சங்காபாளையம். இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு பல ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் எதிரொலியாக புதன்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த துணை மேயர் சு. ப. தமிழழகன் ஆணையர் ஆர். லட்சுமணன் முற்றுகையிட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாநகராட்சி முழுவதும் விடுபட்ட இடங்களுக்கு பாதாளசாக்கடை மற்றும் குடிநீர் ரூ 10 கோடி மதிப்பில் நடைபெறுகிறது அந்த திட்டத்தில் எலுமிச்சங்காபாளையம் சேர்க்கப்பட்டு விரைவில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதி கூறினர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தையில் மகாமக அன்னதான சேவா தலைவர் ஏ. தாமரைமணி, ஆலோசகர் வழக்கறிஞர் எம். வி. சந்தானகிருஷ்ணன், இளைஞர் அணி எஸ். பாலாஜி, பூங்கொடி உள்ளிட்ட பெண்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்