கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி இரு துணைவியருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நவக்கிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ராகு பகவான் பெயர்ச்சியடைந்து வருகிறார். அதன்படி இந்தாண்டு 8ம் தேதி பிற்பகல் 3: 40 மணிக்கு ராகுபகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி கடந்த 6ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி இருகால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலை 10: 30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2: 30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
பின்னர் பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட மங்களப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3: 40 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.