தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை, இப்பள்ளி மாணவர்கள் தவிர, முன்னாள் மாணவர்கள், காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் சேர விரும்பும் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளி மைதானத்தின் வடபுறம் காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் உள்ள லாரி செட்டில் இருந்து தினமும் காலையில் டயர் மற்றும் கழிவுகளை எரிப்பதால் அங்குள்ள புகை காற்றில் கலந்து புகை மண்டலமாக மைதானம் காட்சியளிக்கிறது.
இதனால் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி சுகாதாரத் துறையினர் டயர் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.