தென்காசி-கடையம் சாலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோரணமலை கோவில் வளாகத்தில், கோவிலுக்கு வருகை தரும் கிராமப்புற மாணவ, மாணவிகள் அறிவு வளர்ச்சி பெறவும், பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறவும் வேண்டி, கே. ஆதி நாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகம் அமைந்துள்ளது.
இந்நூலகத்தில் சுமார் 3,400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், பொறியியல், நீட் தேர்வுக்கான புத்தகங்கள் அதிகளவு இங்கு உள்ளன. இதுதவிர பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள், பொது அறிவு, கதைப்புத்தகங்கள், திருக்குறள், அறிவியல் அறிஞர்கள், மருத்துவம், இலக்கியங்கள் மற்றும் தமிழ், ஆங்கிலம் தினசரி நாளிதழ்களும் இங்கு உள்ளன. இதுதவிர கோவில் வளாகத்தில் காவல்துறை மற்றும் ராணுவ பணியில் சேர விரும்புவோருக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் மற்றும் உடல் பலம் பெற ஏதுவாக உடற்பயிற்சி வசதியும் உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.