தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி, மலையராமபுரம் ஆரியங்காவூர், சுப்பையாபுரம், கல்லூரணி, ராமநாதபுரம், சிவநாடானூர் ஊர் பொதுமக்கள் சார்பில் திப்பணம்பட்டி சமூக ஆர்வலர் வேல்முருகன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -
தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணி நடைபெற்று வருவதால், கடந்த பல மாதங்களாக தென்காசி செல்லும் அனைத்து வாகனங்களும் பாவூர்சத்திரரம் கடையம் சாலையில் மலையராமபுரம், திப்பணம்பட்டி ஆரியங்காவூர், கல்லூரணி வழியாக மாற்றுப்பாதையில் செல்வவிநாயகர்புரம் சென்று தென்காசி 4 வழிச்சாலையில் செல்கின்றன.
இந்த மாற்றுப்பாதையானது கிராமப்புற சாலை என்பதால், குறுகலான சாலையாக அமைந்துள்ளது. இந்த கிராமப்புறச்சாலை வழியாக தான் தென்காசிக்கு செல்லும் அனைத்து பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தினமும் வந்து சென்று கொண்டு இருக்கின்றன.
மேலும்பல ஆயிரம் டன் கணக்கான லோடுகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையும் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடுமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.