தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தியதைக் கண்டித்து, மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன் கல்லூரியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில்,
திமுக பேனா்களை வைத்து
அரசியல் களமாக மாற்றிவிட்டதாகக் கூறியும், பெற்றோா்- ஆசிரியா் கழகம் சாா்பில் மாணவா்களிடம் ரூ. 300 வசூலிப்பதாகவும், மூன்றாம் ஆண்டு முடித்து வெளியேறும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்கும்போது மீண்டும் ரூ. 300 வாங்குவதாகவும் கண்டனம் தெரிவித்து இப்போராட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டனா்.
தொடா்ந்து வகுப்புப் புறக்கணிப்புப்
போராட்டம் நடத்தப்போவதாக அவா்கள் அறிவித்துள்ளதால், கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.