தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகர்மன்றத் தலைவர் ஹபிபூர் ரஹ்மான் இனிப்பு வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடையநல்லூரில் அனைத்து வார்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீர் வழங்கும் வகையில் புதிய குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும், 1973 இல் தொடங்கப்பட்ட உள்ளூர் குடிநீர் திட்டங்களில் புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.
மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர், துணை முதல்வர், ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தேன்.
அதன்பயனாக, தமிழக நிதிநிலை அறிக்கையில், கடையநல்லூர் நகராட்சி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகள் அனைத்துக்கும் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்திட ரூ. 864 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினோம் என்றார்.