தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரியில் பவானி என்பவருக்குச் சொந்தமான தென்னை நார் ஆலை உள்ளது. இங்கு வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (33) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (பிப்.4) வேலை செய்து கொண்டிருந்தபோது, இயக்கத்தில் இருந்த இயந்திரத்தின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாம்.
அவர் மீட்கப்பட்டு, உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சடலத்தை ஊத்துமலை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.