தென்காசி: ரமலான் பண்டிகை; சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

85பார்த்தது
தென்காசி: ரமலான் பண்டிகை; சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
ரமலான் பண்டிகையையொட்டி ரெட்டியார்பட்டி சந்தையில் ஆடு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். ரமலான் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் ஆட்டுச் சந்தையில் காலைமுதல் ஆலங்குளம், திருநெல்வேலி, முக்கூடல், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடுகள் வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

ஆடுகளின் தரத்தைப் பொறுத்து ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. எனினும் போதிய அளவில் ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் திரும்பிச் சென்றனர். விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். 

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்டபோது, பண்டிகைக்கு ஓரிரு தினங்கள் முன்னதாக ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும், இறைச்சிக் கடைக்காரர்களும் தங்களுக்குத் தேவையான ஆடுகளை கடந்த வாரமே வாங்கிவிட்டனர். இதனால் விலை உயர்வு அச்சம் காரணமாக ஆடுகளை வாங்குவோர் மிகக் குறைந்த அளவே வந்துள்ளனர். மேலும், ரமலானை விட பக்ரீத் பண்டிகைக்குத் தான் ஆடுகள் அதிக விலை போகும் என்றனர்.

தொடர்புடைய செய்தி