சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜெயமங்கலம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில்
திருச்செந்தூரிலிருந்து கும்பகோணத்துக்கு சென்ற தமிழ்நாடு அரசு விரைவு மிதவைப் பேருந்தை ஓட்டுநர் தூத்துக்குடி இடையர்காடுவை சேர்ந்த ஜெஸ்டின் ஆர்தர் (55) ஓட்டிச்சென்றார். திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெனிபர் (41) நடத்துனராக இருந்தார். ஜெயமங்கலம் என்ற இடத்தில் வந்த போது திடீரென ஓட்டுநர் சீட்டுக்கு கீழ் உள்ள முன்பக்க டயர் பேரிங் கப்செட் உடைந்து தனியாக கழண்டு பேருந்தின் முன்பாக டயர் ஓடியது. டயர் இல்லாமல் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரம் சென்ற பேருந்து சாலையின் ஓரத்திலேயே நின்றது. இதில் பயணித்த 25 பயணிகளும் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பேருந்து வேறு பக்கம் திரும்பாமல் நேராகச் சென்றதால் பக்கவாட்டில் உள்ள பள்ளத்திற்குள் கவிழாமலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராததாலும் விபத்து நேராமல் தப்பியது. இதில் பயணித்த அனைவரும் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பின்பு அவ்வழியாக வந்த தஞ்சாவூர் பேருந்தில் பயணிகளை மாற்றி அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்து, ஜேசிபி இயந்திரம் வரவைத்து நடுசாலையில் நின்ற பேருந்தை, சாலை ஓரத்தில் இழுத்து விட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.