சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் இருந்து பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் வழியாக காரைக்குடி நோக்கி (மல்லிகா) என்ற தனியார் பேருந்து இன்று காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியைச் சேர்ந்த 55 வயது குப்புசாமி என்பவர் ஓட்டி வந்தார். 55 பயணிகளுடன் பயணம் செய்த நிலையில் ஆலங்குடி மேலமகாணம் அருகே வந்து கொண்டிருந்த போது மஞ்சுவிரட்டு காளை ஒன்று குறுக்கே வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பும் போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சூரக்குடி என்ற கண்மாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
அருகில் உள்ளவர்கள் வருகை தந்து பேருந்து கண்ணாடியை உடைத்து பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீசார் ஓட்டுநர் குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சுவிரட்டு காளை மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து வளைத்த போது நடந்த இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.