சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் 800 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவ பெருந்திருவிழா கடந்த ஜூன் 1 ஆம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் பெருந்திருவிழா விமர்சையாக துவங்கியது.
இந்த வைகாசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் திருக்கல்யாணமும், ஆறாம் நாள் நள்ளிரவில் திகிலூட்டும் கழுவன் விரட்டும் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் நிகழ்வும், தேர் நிலையை அடைந்தவுடன் தேரடி படியில் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் மூன்று லட்சம் தேங்காய் உடைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நிறைவு நாளான பத்தாம் நாள் பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோடி மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மின்னொளியில் மின்னும் பிரம்மாண்ட கப்பல் போல் காட்சி அளிக்கும் பூப்பல்லக்கில் நள்ளிரவில் எழுந்தருளினார். அன்னை ஸ்ரீ சிங்கம்பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், ஸ்ரீ விநாயகர் வெள்ளி மூஞ்சூர் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.