சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் இணைப்பு வரி, கடைகளுக்கான வாடகை உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமாக 113 கடைகள்உள்ளன. இதில் 18 கடைகள் முறையாக வாடகை செலுத்தாமல் ரூ. 3 லட்சத்து 16 ஆயிரம்பாக்கியுள்ளது.
நகரில் 6 ஆயிரத்து 862 குடிநீர் இணைப்பு உள்ளது. ரூ. 68 லட்சத்து 40 ஆயிரம் வரி கட்டாமல் நிலுவையில் உள்ளது. அதேபோல் நகரில் உள்ள 17 ஆயிரத்து 997 வீடுகளுக்கு ஒரு கோடியே 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வரி பாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
நகராட்சி ஊழியர்கள் நிலுவையில் உள்ள வரிகளை கட்ட அறிவுறுத்துகின்றனர். நீண்ட நாட்களாக கட்ட மறுக்கும் கடைகளுக்கு சீல் வைத்து, குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை நகராட்சியில் நகர் பகுதியில் உள்ள 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.