சிவகங்கை: கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

68பார்த்தது
நெல்லை மாவட்டம், நடுக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார் எழுந்தது. 

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை அடுத்து, மீண்டும் கேரளாவுக்கே மருத்துவக் கழிவுகள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் 11 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அழிக்கப்பட வேண்டும். இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதன்படி சிவகங்கை மாவட்ட மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள் தஞ்சாவூர் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும். 

ஆனால் இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், மாவட்டத்தில் ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்மாயொட்டி ஏராளமான மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து மருத்துவக் கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தொடர்புடைய செய்தி