சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில், ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள், அப்பகுதியினரால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாணிபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும்திருப்பத்தூர் அருகே உள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சிவசங்கரன் (எ)விக்னேஷ் (27) – இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவில், அழகமாநகரியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தோப்பில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியினர் அந்த இடத்திற்குச் சென்று பார்ப்பதற்குள், அங்கு மணிகண்டன் மற்றும் விக்னேஷ் இருந்துள்ளனர். இருவரும் தோப்பிற்குள் இருப்பதை பார்த்ததும், சிலர் அவர்களை கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். தப்பிக்க முயன்ற இருவரும் பலமாக தாக்கப்பட்டு விழுந்துள்ளனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.