சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற கூட்டாய்வில், காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி வாகனங்களின் நிலைமையை ஆய்வு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், வாகனங்களின் நிறம், பள்ளி பெயர், தொடர்பு எண்கள், பிரதிபலிப்பான் பட்டைகள், பிரேக் திறன், உருளைப்பட்டைகள், அவசரக் கதவுகள், இருக்கைகள், படிக்கட்டுகள், வாகனத்தின் உட்புற அமைப்பு, தரைப்பலகை, ஜன்னல்கள், முதலுதவிப் பெட்டி, தீயணைக்கும் கருவி, வேகக் கட்டுப்பாட்டி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டன. மொத்தமாக 95 பள்ளிகளைச் சேர்ந்த 554 பள்ளி வாகனங்களில், இன்று மட்டும் 405 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 26 வாகனங்கள் குறைபாடுகளுடன் இருப்பதால், அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. குறைகளை சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்குப் பிறகு மட்டுமே அந்த வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களுக்கான அறிவுறுத்தல்களில், முறையான பரிசோதனையுடன் வாகனத்தை இயக்க வேண்டும், அதிக வேகத்தில் ஓட்டக்கூடாது, மது அருந்துதல், கைபேசி பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பன அடங்கும். மேலும், முதலுதவி மற்றும் தீயணைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.