சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் இணைய தளம் மூலம் பண மோசடி செய்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே வல்லனேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி சண்முகப்பிரியா(23). இவர் இளங்கலை தகவல் தொடர்பியல் பட்டதாரி ஆவார்.
இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த ராகுல்(33) என்பவர் இணையதளம் மூலம் சண்முகப்பிரியாவை தொடர்பு கொண்டு, ரூ. 500 செலுத்தினால் அந்தத் தொகைக்கு 10% சேர்த்து தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சண்முகப்பிரியா மூன்று தவணைகளாக ரூ. 17 ஆயிரத்தை கூகுள் பே மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், ராகுல் கூறியபடி 10% கூடுதல் தொகையைச் சேர்த்து பணத்தை திருப்பித்தராமல் அலைக்கழித்துள்ளார்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட இணைய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் தேவி வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம், முருங்கபட்டி அருகேயுள்ள காரத்தோப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராகுல்(33) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிவகங்கை மாவட்ட சிறையிலடைத்தார்.