சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வனத்துறை அதிகாரம் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"சிவகங்கை மாவட்டத்தின் கிராமங்களில் பருவமழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. இதில் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனது விவசாய நிலத்தில் யூகலிப்டஸ் மரங்களை பயிரிட்டுள்ளார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிக ஆழத்திற்கு சென்றுவிடும்; ஏற்கனவே வறட்சி நிலவுகிற பகுதியில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அந்த மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோருக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது, வனத்துறையின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,
"தனியார் பட்டா நிலங்களில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ் மரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உரிமை இல்லை" எனக் கூறினார்.
வனத்துறை தரப்பில் கூறிய கருத்தை பதிவு செய்த நீதிபதிகள்,
"மனுதாரர் கேட்கும் தீர்வை வனத்துறை வழங்க முடியாது. எனவே, அவர் மாவட்ட ஆட்சியரை அணுகி நிவாரணம் பெறலாம்" என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.