சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா, இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
மானாமதுரை நகரத்தின் முக்கியமான ஆலயமாக விளங்கும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு முன்னதாக, ஊரின் எல்லை தெய்வமாகக் கருதப்படும் ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மனுக்கு விழா நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும், விழா உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு அண்ணாசிலை ரயில்வே கேட் அருகிலுள்ள ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் எழுந்தருளினார். பின்னர், அங்கு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுஇன்று இரவு சுமார் எட்டு மணி வரை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கோயிலில் மாவிளக்கு பூஜை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.