சிவகங்கை ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிவகங்கை வழக்குரைஞர் சங்கச்செயலர் கொ. சித்திரைச்சாமி தலைமை வகித்து பேசியதாவது:
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக, புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு, சட்டங்களில்தான் திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது சட்டங்களையே மாற்றுகிறார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் காலனிய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதால், அதற்கு பதிலாக புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு சொல்கிறது.
மேலும், எந்தச் சட்டத்துக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் நடைமுறை எப்போதுமே இருந்ததில்லை. இதுவரை சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. அதை மாற்றுவது ஏற்புடையது அல்ல என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், இணை செயலாளர் நிரூபன் சக்கரவர்த்தி, பொருளாளர் வல்மீகநாதன், ராம்பிரபாகர், பிரிஜேஷ்படேல், ஆர். மகேந்திரகுமார், தங்கபாண்டியன், மதி, அசோக்மேத்தா, பாலசுப்பிரமணியன், ராமலிங்கம் உள்பட ஏராளமான வழக்குரைஞர்கள் இன்று மதியம் சுமார் 1 மணி வரை கலந்து கொண்டனர்.