சிவகங்கை மாவட்டம் அதப்படக்கியில் 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் தி. பாலசுப்பிரமணியன், அழகப்பா அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் மார்டின் ஜெயப்பிரகாஷ் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில் ஆய்வு செய்து கல்வட்டங்கள், கற்குவியல்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவர்கள் கூறியதாவது: 2500 ஆண்டு பழமையானதுகல்வட்டங்கள் பெருங்கற்கால பண்பாட்டுடன் சார்ந்தது. இறந்தவருக்கான ஈமசின்னங்களாக இவற்றை அமைத்துள்ளனர். அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வழி நடத்திய தலைவர் மற்றும் வேட்டையின் போதோ, வயது மூப்பால் இறக்க நேரிடும் போது, அவர்களது உடலை அடக்கம் செய்து அவர்களது நினைவு, அடையாள சின்னமாக தரையின் மேற்பரப்பில் பெரிய செம்பூரான் கற்களை நட்டு வைத்துள்ளனர். இதுவே நாளடைவில் கல்வட்டம் என அழைத்துள்ளனர். இந்த வழக்கம் பெருங்கற்கால நாகரீக வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. 20 கற்குவியல் கொண்டதுஇப்பகுதியில் கல்வட்டங்கள் வட்ட வடிவில், 20 க்கும் மேற்பட்ட கற்குவியல்களை கொண்டிருக்கும். மேற்பரப்பில் 3. 5 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கல்வட்டங்களாக அமைத்துள்ளனர். தெற்கு பகுதியில் பெரிய தலைகல்லும் மற்றும் வடக்கு பகுதியில் 12 கற்களை கொண்டுள்ளது. தமிழகத்தின் தொன்மையான பண்டைய நாகரீக வரலாறு நீரோடை அருகே அமைந்துள்ளது தான் வரலாற்று சிறப்பு, என்றனர்.