பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுனில் குமார் சிங் (வயது 45). இவர் பி. பி. சி. எல். குழாய் இணைப்பு பதிக்கும் பணியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை 6 மணியளவில் சங்ககிரி-எடப்பாடி ரோடு மஞ்சக்கல்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக உள்ள புளியமரம் அடியில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்தது. திடீரென அந்த சரக்கு வாகனத்தின் இடதுபுற பின்பக்க டயர் கழன்று ஓடி வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சுனில் குமார் சிங் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுனில் குமார் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.