சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தைரியம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது-2025 வழங்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் துணிச்சலுக்காக சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, முதல்-அமைச்சரால் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுகிறது.
கல்பனா சாவ்லா விருது குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற இயற்கை சீற்றங்கள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ விபத்துகள், திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி போன்றவற்றின் போது தனிநபர் துணிச்சல்கள் செய்திருப்பின் அவை அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இச்செயலுக்கான விருது பெற https://awards.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் தகுதியான பெண்மணிகள் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் அறை எண்-126, மாவட்ட சமூக நல அலுவலகம், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை அணுகி வருகிற 16-ந் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.