சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 25). இவர், கோர்ட்டு வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் சமையல் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அர்ச்சனா 3 ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்வதற்கு ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். பழைய பஸ் நிலையம் அருகில் வந்தபோது வளைவில் பஸ்சை டிரைவர் வேகமாக திருப்பினார். அப்போது, படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்த அர்ச்சனா எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அர்ச்சனாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அர்ச்சனா உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.