நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சேலம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ரயில் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தையொட்டி காவல் துணை ஆணையாளர் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் சௌ. பாவேந்தன், மண்டல செயலாளர் அங்கப்பன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர்.