சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 4-வது வார்டுக்குட்பட்ட அழகாபுரம் பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்.
தொடர்ந்து 14-வது வார்டு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றி, மழைநீர் தடையின்றி செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து 29-வது வார்டு ராஜாராம் நகர் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர், கழிவுநீர் மரவனேரி ஓடையை சென்றடையவும், ஓடை மற்றும் வடிகால் பகுதிகளில் உள்ள அடைப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கழிவுநீர் செல்லும் பாதையை அகலப்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் உதவி ஆணையாளர் லட்சுமி, கவுன்சிலர்கள் சாந்தமூர்த்தி, கிரிஜா, மகேஷ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.