சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும்,
அழகிரிநாதருக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மாலை நேரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி, கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி,
பூதேவி சமேதமாக சேலம் கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோயில் தேர்நிலையத்துக்கு வீதி உலாவாக வந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடேஸ்வரி சரவணன் ஆகியோர் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வழிநெடுகிலும் கோலாட்டம் ஆடியும், கோவிந்தா, கோவிந்தா என கோசங்கள் முழங்கவும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.