சேலம் மாவட்டத்தில் இயங்கக்கூடிய தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் விபத்து இல்லாமல் பஸ்களை இயக்க டிரைவர்களுக்கு அறிவுரைகள், நுணுக்கங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் டி. தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆர். மாலதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் பி. சதாசிவம், சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு டிரைவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 3 ஆயிரத்து 190 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 772 பேர் பலியாகி உள்ளனர். இது வருங்காலத்தில் வெகுவாக குறைக்கப்பட வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் வாகனத்தின் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்துவது குறித்தும் டிரைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் 120 தனியார் மற்றும் அரசு டிரைவர்கள் கலந்து கொண்டனர்.