சேலம் குமாரசாமி பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வன்முறை காலத்தில் கூட்டத்தை கலைப்பது, கலவர தடுப்பு முறைகள் குறித்த ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது. எஸ்பி கெளதம் கோயல் உத்தரவின் பேரில் இந்த கலவர தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் திடீரென கலவரம் ஏற்படும் போது ஒவ்வொரு நிலைகளாக போலீசார் எதிர்கொள்ளும் முறைகள் குறித்து தத்துருபமாக செய்து காட்டினர். இந்த ஒத்திகையில் போலீசார் ஒருபுறமும் போலீசார் கலவரக்காரர்களை போன்று மாறுவேடத்தில் இருந்தனர். கலவரக்காரர்கள் வேடமனிந்த போலீசார் டயர் மற்றும் அங்கிருந்த பொருட்களை தீ வைத்து கொளுத்தியும், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். கம்பு மற்றும் மரக்கட்டைகளை கொண்டு போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்த முயன்றனர். மேலும் போலீஸ் அராஜகம் ஒழிக என கோசங்களை எழுப்பினர். முதலில் சட்டவிரோதமாக கூடிய கூட்டத்தை கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கலவரக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் எச்சரிக்கையை மீறி கலவரக்காரர்கள் முன்னோக்கி வந்ததால் அவர்களை நோக்கி போலீசார் தடியடி நடத்தினர். இருப்பினும் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்களை நோக்கி கண்ணீர் புகை கொண்டு வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தினர். தொடர்ந்து போலீசார் கலவரக்காரர்களை சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.