சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அத்வைதா ஆஸ்ரமம் சாலையில் உள்ள விநாயகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா நம்பியூர் சூரிபாளையம் அமர்ஜோதி ஸ்பின்னிங் மில்லிலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீராஜேந்திர ஆட்டோ ஏஜென்சி சேவை மையத்திலும், நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் உள்ள கே.கே.பி. பைன் லினன் பிரைவேட் லிமிடெட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் தொழில்துறை வளாகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், இ.பி.எஃப். அட்வான்ஸ்கள் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல் பாதி கூட்டமும், மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை இரண்டாம் பாதி கூட்டமும் நடக்கிறது. எனவே, கூட்டத்தில் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி தெரிவித்துள்ளார்.