சேலம் மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 9 வட்டார மருத்துவமனைகள் உள்ளன.
மேலும் 20 சமுதாய சுகாதார நிலையங்கள், 67 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 502 துணை சுகாதார நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனைத்து விதமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட அவசர கால நோய் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீதம் சுகப்பிரசவங்கள் நடைபெற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.