சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை ரகசியமாக நிறைவேற்றிவிடலாம் என்ற நோக்கில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் தொகுதி மறுவரை பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்துள்ளார். பா. ஜனதா கட்சி மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கி வருகிறது. எனவே தொகுதி மறு வரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இதை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நிதியை வழங்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் சேலம் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மீண்டும் தி. மு. க. ஆட்சி அமையும். அ. தி. மு. க. வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறி இருக்கிறார். தி. மு. க. விற்கு போட்டி அ. தி. மு. க. மட்டும் தான். 2-வது இடத்திற்கு வர மற்ற கட்சிகள் போட்டி போட்டுக்கொள்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.