சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28), கார் டிரைவர். சமீபத்தில் இவருடைய செல்போன் டெலிகிராமுக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக ரூ. 94 லட்சம் வரை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு லாபம் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரபாகரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்தரவிட்டார்.
அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக கரூரை சேர்ந்த மைலேஸ்வரன் (19), தூத்துக்குடியை சேர்ந்த ஆதித்யா (20) ஆகியோரை நேற்று கோவையில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த மோசடியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.