சேலம் அருகே மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராமகவுண்டனூர் செல்லும் வழியில் சுடுகாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மருத்துவ கழிவுகளை அகற்றக்கோரி ஊர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி தலைவர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று சங்கு ஊதியும், மணி அடித்தபடியும் கோரிக்கை அடங்கிய பேனரை கைகளில் பிடித்தபடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
நுழைவு வாயில் அருகே வந்தபோது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து சங்கு மற்றும் மணியை போலீசார் வாங்கிக்கொண்டு 5 பேர் மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க செல்லலாம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சிலர் மட்டும் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.