சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து அணைக்கு வரும் 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள காவிரி கரையோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக நாளை ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி, பாதுகாப்பு நலன் கருதி காவிரி ஆற்றில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், புகைப்படங்கள் எடுத்தல், காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.