சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மற்றும் சென்ட்ரல் லேர்னிங் கேம்பஸ் இணைந்து, சேலம் காந்தி மைதானத்தில் நடத்திய மாபெரும் மாரத்தான் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"போதை இல்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இரண்டு கிலோ மீட்டர், 5, 7 மற்றும் 10 கிலோ மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், பள்ளி , கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து, சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி தலைவர் த. சரவணன் பேசுகையில், இன்றைய இளைஞர்களிடம் போதைக்கு அடிமையாகாமல் இருக்க தமிழகம் முழுக்க விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தி வருவதாக கூறினார்.
மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 72 பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், ரூ. 7, 500, ரூ. 10, 000 மற்றும் ரூ. 20 ஆயிரம் என வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டன. பதக்கத்துடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.
விழாவில், சேலம் மக்களவை உறுப்பினர் டி. எம். செல்வகணபதி, முன்னாள் எம். பி. பார்த்திபன், சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட காவல் துணை ஆணையர் வேல்முருகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினர்.