தமிழகத்தில் 2024-2025-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், அரசு பள்ளிகளில் படித்து 7. 5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் மாநில அளவில் சேலம் மாவட்டம் வீரபாண்டி அரசு மாதிரிப்பள்ளி மாணவி எஸ். ராவணி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 200-க்கு 199. 5 மதிப்பெண் பெற்றார்.
அரசு பள்ளியில் படித்து என்ஜினீரியரிங் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகநாதன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் அவருக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மாணவியின் சொந்த ஊர் நடுவனேரி அடுத்த ஆலாங்காட்டானூர். மாணவியின் தந்தை செல்வம், தறித்தொழிலாளி. தாய் சிவரஞ்சனி. மாணவியின் தம்பி பெருமாகவுண்டம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கலெக்டரிடம் வாழ்த்து
தொடர்ந்து மாணவி எஸ். ராவணி நேற்று மாலை தனது பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவிக்கு அப்துல்கலாம் புத்தகத்தை வழங்கி மேலும் பல சாதனைகள் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உடனிருந்தார்.