சேலம் அருகே கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலையில் பேண்ட், சட்டை அணிந்த டிப்-டாப் வாலிபர் ஒருவர் ஒருவித தயக்கத்துடன் வந்தார். அவரிடம் அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்த போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து அவர் விசாரித்தபோது அவர் டிரைவர் என்பதும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறி இருந்தார். இதில் என்ன 2-வது திருமணம் தானே என்று யோசிக்க தொடங்கினால், காணாமல் போன பெண்ணுக்கு வந்த டிரைவர் 3-வது கணவராம். இப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டர் வடிவேலு பாணியில் சற்று தவித்து தான் போனார்.
இருப்பினும் அந்த டிரைவரின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர். தனது 2-வது மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் 3-வது கணவர் புகார் கொடுத்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.