சேலத்தில் 269 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

72பார்த்தது
சேலத்தில் 269 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையொட்டி பள்ளி மாணவர்-மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சேர்ந்த 36 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 269 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி சேலம் 3 ரோடு ஜவகர் மில் திடலில் நேற்று நடைபெற்றது. இதற்கான அனைத்துப் பஸ்கள் மற்றும் வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கோகிலா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது, 3 பஸ்களில் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்து இருக்கை அமைப்பு, பிரேக்கின் தன்மை, அவசரக் கதவு சரியாக உள்ளதா? தகுதிச்சான்று மற்றும் பதிவுச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

பின்னர் அவர் பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி