சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கும், சென்னையை சேர்ந்த கோவிந்தம்மாள் மகள் சுதா (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அய்யப்பன், பெரியப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சுதா சத்துணவு ஆசிரியையாக இருந்தார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனம் உடைந்த சுதா, எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுதா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுதாவின் தாயார் கோவிந்தம்மாள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்தார். மேலும் ஆசிரியை சுதா தற்கொலை தொடர்பாக அவருடைய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.