சேலம் மாவட்டம் ஓமலூர் வழியே சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து தென்காசிக்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காமலாபுரம் பகுதியில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு கார்கள் போலீசாரை பார்த்ததும் சாலையில் திரும்பிச் சென்றன. உடனடியாக போலீசார் கார்களை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அப்போது இரண்டு கார்களிலும் 25 மூட்டைகளில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன.
இதையடுத்து இரண்டு கார்களுடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் தென்காசியைச் சேர்ந்த முத்துகுமார், முத்துராஜா, வேலுசாமி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மொத்தமாக வாங்கிச் சென்று தென்காசியில் சில்லறையாக விற்பனை செய்யும் கடைகளுக்குச் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.