தர்மபுரி மாவட்டம் சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் கோவையில் நடந்து வரும் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை இவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து மேட்டூர் வழியாக தர்மபுரி சென்றனர்.
மேட்டூர் ஆர். எஸ். பகுதியில் அரசு மதுக்கடை அருகில் நின்ற லாரி மீது சதீஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினர். சிவகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சதீஷ்குமாருக்கு சரண்யா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சிவக்குமாருக்கு உமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.