நங்கவள்ளி ஏரியில் இருந்து வைரன் ஏரி இணைப்பு கால்வாய் பணிகளை விரைந்து முடித்து இதன் வழியாக உள்ள வைரன் ஏரி, அரியாம்பட்டி ஏரி, செலவடை சின்ன ஏரி, நாச்சம்பட்டி ஏரிகளுக்கு வரும் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி நேற்று (டிசம்பர் 23) விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜலகண்டாபுரம் அருகே செலவடை சின்ன ஏரியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செலவடை ஊராட்சி மன்றத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழு மாநில செயலாளர் சுரேஷ் மற்றும் ராமிரெட்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தன்ராஜ், அரியாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபு, கோவிந்தராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஜலகண்டாபுரம் அருகே மானாத்தாள் ஏரியில் இருந்து ராமிரெட்டிபட்டி ஏரியை இணைக்கும் கால்வாய் பணி இன்னும் தொடங்கவே இல்லை என்பதால் இந்த வழியில் பயன்பெறக்கூடிய மல்லிகுட்டை ஏரி, சேடப்பட்டி ஏரி, ஆரூர்பட்டி ஏரி, ராமிரெட்டிபட்டி ஏரிகளுக்கு இன்னும் காவிரி உபரிநீர் தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத நிலை உள்ளது. இந்த கால்வாய் பணிகளையும் விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.