தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பாலாற்றில் வனத்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. சதாசிவம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பாலாறு பகுதிக்கு நேரில் வந்து சோதனைச்சாவடி அமைப்பதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பின்னர் இரு மாவட்ட கலெக்டர்களும் நிருபர்களிடம் கூறியதாவது: -
இரு மாநில எல்லை பகுதியான பாலாற்றில் வனத்துறை மற்றும் போலீஸ்துறை இணைந்து சோதனைச்சாவடி அமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ள வந்துள்ளோம். இந்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இது குறித்து தமிழக அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வின் போது, ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்
பிரபு, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. சதாசிவம், கொளத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம். சி. மாரப்பன், மேட்டூர் மற்றும் சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகள், மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், மேட்டூர் தாசில்தார் விஜி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.