சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சதாசிவம் எம். எல். ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -சித்திரை முழு நிலவு மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாமல்லபுரத்தில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மேட்டூர் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 85 பஸ்களில் பா. ம. க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் எனது தலைமையில் (சதாசிவம்) பா. ம. க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர். எனவே கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.