சேலம் மாவட்டம் தேவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழக முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உற்பத்தியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்ஒரு பகுதியாக மண் வளத்தை காக்கும் வகையில் பசுந்தாள் உர விதைகள் (தக்கை பூண்டு விதைகள்) 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தலைமை தாங்கி விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் வழங்கினார்.
இதில் தேவூர் உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், ரமேஷ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள், வயல்களில் பசுந்தாள் விதை விதைத்து 35 முதல் 45 நாட்களில் அதாவது பூ பூக்கும் தருணத்திற்கு முன்பு தக்கை பூண்டை மடக்கி உழவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு சாகுபடி முறை குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.